Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Thursday, April 2, 2009

தலைவர் பிரபாகரன் தொடர்

தலைவர் பிரபாகரன் தொடர் 8



என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு?

எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது' என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது. வடக்கே ஏதோ ஓரிடத்தில் என்று சொல்லப்பட்டது. என்ன பயிற்சி, யார் அளிக்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருந்தது. இந்திய அரசு, இலங்கைப் போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன? பிரதமர் இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. எல்லாம் ரகசியம். பரம ரகசியம்.

பாண்டிபஜார் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆஹா! சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் என்று உருக ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. ஒரு தமாஷ். இலங்கையில் எத்தனை இயக்கங்கள் செயல்படுகின்றன, யார் யார் முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம் அப்போது இங்கே தெரியாது. இலங்கைப் போராளி என்றாலே புலிதான். தெரிந்த ஒரே பெயர். வெலிக்கடைச் சிறைப் படுகொலை விவரங்கள் தெரியவந்தபோது குட்டிமணி, தங்கதுரை, ஜகன் போன்ற பெயர்கள் தெரிந்தன. பெயர்கள்தான். முகம் தெரியாது. 1983 ஜூலை மாதம் அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட மாபெரும் இனப்படுகொலை வைபவத்துக்குப் பிறகு இந்த விவரங்கள் படிப்படியாகப் பரிமாணம் பெறத் தொடங்கி, இலங்கையில் என்னவோ விபரீதம் என்று இங்கே விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகள் கூர்ந்து நோக்கத் தொடங்கின. என்ன செய்யலாம், எப்படி உதவலாம், யாரைத் தேடிப் பேசலாம் என்று எல்லோரும் தவிக்கத் தொடங்கினார்கள்.

எண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். எத்தனை பேர் இருக்கிறீர்கள் தமிழகத்தில்? ஐந்து போராளி இயக்கங்களா? சரி, பரவாயில்லை. அனைவரும் வாருங்கள். நான் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்களிடையே ஒற்றுமை வேண்டும். ஒரே நாடு, ஒரே பிரச்னை, ஒரே மக்கள், ஒரே இனம். ஒரே இலக்குக்காகத்தானே போராடுகிறீர்கள்? ஏன் தனித்தனிக் குழுக்கள்? அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் என்ன? சம்மதமென்றால் நான் உதவுகிறேன். வாருங்கள், பேசுவோம். உண்மையில் அது எம்.ஜி.ஆரின் விருப்பம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக மக்கள் அத்தனை பேரின் விருப்பமாகவும் அன்றைக்கு அதுதான் இருந்தது.

உலக அரசியலில் பனிப்போரும் தமிழக அரசியலில் வெப்பப்போரும் மிகுந்திருந்த காலகட்டம் அது. இலங்கைப் போராளிக் குழுக்களை எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசவிருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் வாருங்கள். இங்கும் இளைப்பாறலாம். ஆனால் ஒரு விஷயம். எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைத்திருக்கும் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக!

பிரபாகரன் அப்போது திருவான்மியூரில் தங்கியிருந்தார். ஆண்டன் பாலசிங்கம், இராகவன், பேபி சுப்பிரமணியம், பண்டிதர், சங்கர், ரகு என்று அவருடன் ஒரு சிறு குழு (இதில் சங்கரும் ரகுவும் மெய்க்காப்பாளர்கள்.) அவர் தங்கியிருந்த இடத்திலேயே இருந்தது. சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல போராளிகள் தங்கியிருந்தார்கள்.

இது பிரச்னை. பெரிய பிரச்னை. எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கலைஞர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்குப் போவது மிகுந்த தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடியது. போகாமல் இருப்பது அவமதிப்பது போல் ஆகிவிடும். என்ன செய்யலாம்?

பிரபாகரன் சிந்தித்தார். பிரச்னை, அவர்கள் அழைப்புக்குச் சம்மதிப்பதா? இல்லையா? என்பது மட்டுமல்ல. தமிழகத்தில் அப்போது முகாம் அமைத்து இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பெரும் போராளி அமைப்புகளின் தலைவர்களையும் இரண்டு தலைவர்களும் அழைத்திருந்தார்கள். என்றால் கண்டிப்பாக உமாமகேஸ்வரனும் வருவார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த நாளாக, நாங்கள்தான் உண்மையான விடுதலைப் புலிகள் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு PLOTE என்னும் அமைப்பைத் தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிருந்தார். அவரும் தமிழகத்தில் தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் பத்மநாபா, ஈரோஸின் பாலகுமார், டெலோவின் சிறீ சபாரத்தினம் அத்தனை பேரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள். முதல்வர் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் இந்த எதிர் துருவங்கள் மோதிக்கொள்ளும்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால்?

தமிழகம் மதிக்காது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிறகு ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். உன்னதமான நோக்கத்துடன் தேசப்பணி புரிபவர்களைப் பிறகு வெறும் கிரிமினல்களாகத் தமிழகம் பார்க்கத் தொடங்கிவிடும். எதற்கு இந்த அபாயம் என்று பிரபாகரன் நினைத்தார். ஆனால் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் அழைத்திருக்கும்போது, அதனை மதித்து நாம் போகாமல் இருந்தால் தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறதே?

என்ன ஆனாலும் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப் போட்டியாக, முதல் நாள் கலைஞர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைத் தவிர்த்தே தீருவது என்று இறுதியில் முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப் போவதா? இல்லையா? என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இருபத்தி நான்கு மணிநேர அவகாசம் இருக்கிறது.

ஒரு விசித்திரம். இதே மாதிரிதான் அன்றைக்கு உமாமகேஸ்வரனும் நினைத்திருக்கிறார்! கலைஞரின் அழைப்பை அவரும் ஏற்கவில்லை. கூட்டத்துக்குச் செல்லவில்லை. மற்ற மூன்று போராளி இயக்கத் தலைவர்களும் கலைஞரைச் சென்று சந்தித்த விவரம் மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தன. எம்.ஜி.ஆர். கடுப்பானார். உடனே அன்றைய டி.ஐ.ஜி. அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில் சந்தித்து, தன்னை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பினார்.

திருவான்மியூர் வீட்டுக்கு அலெக்சாண்டர் வந்தபோது பிரபாகரன் அங்கே இல்லை. பாலசிங்கம் இருந்தார். அலெக்சாண்டர் அவரிடம் விவரம் சொன்னார். முதல்வர் கோபமாக இருக்கிறார். கலைஞரின் போட்டிக் கூட்டத்துக்குப் போராளித் தலைவர்கள் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் போகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார். இன்று மாலையே.

தர்மசங்கடம்தான். ஆனால் சமாளித்தாகவேண்டும். நான் வரவில்லை, நீங்கள் மட்டும் போய்வந்துவிடுங்கள் என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார் பிரபாகரன்.

பாலசிங்கம், மு. நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். `எங்கே பிரபாகரன்' என்று கேட்டார். `அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார், அதனால் வரமுடியவில்லை' என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.

எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு பேசினார். என்ன நடக்கிறது இலங்கையில்? போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன? இந்தியா என்ன உதவி செய்கிறது? பயிற்சி அளிக்கிறதா? பண உதவி செய்கிறதா? இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.

பாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப்படுகொலைகள். `கறுப்பு ஜூலை'யில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை அளிக்கும் பயிற்சிகள். இருநூறு விடுதலைப்புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.

ஓஹோ! என்றார் எம்.ஜி.ஆர். `உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்று கேட்டார்.

ஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று, `நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா?'

எம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப்போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத்தளத்துக்குக் கீழே போனது. நின்றதும் இறங்கி, கதவைத் திறந்தால் விசாலமான ஓர் அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.

இரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி..


டனே சென்னைக்குச் செல்லவும்..

யாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க வல்லவர், அதே சமயம் அரசியல் ரீதியில் இயக்கம் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வல்லவர் என்று பிரபாகரன் அவரைப் பற்றி மதிப்பிட்டிருந்தார்.

மதிப்பீடுகளில் தவறேதும் இல்லை. ஆனால், பாலசிங்கத்திடம் பிரபாகரன் தீர்க்கச் சொல்லி அளித்த முதல் பிரச்னை ஒரு காதல் விவகாரமாக அமைய நேர்ந்ததுதான் விசித்திரம்.

தன் மனைவி அடேலுடன் பாலசிங்கம் சென்னை வந்து சேர்ந்ததும் பிரச்னையின் முழுப்பரிமாணம் அவருக்குப் புரியவைக்கப்பட்டது.

`என்னால் நம்ப முடியவில்லை. இயக்கமே பிளவுபடும் அளவுக்கா இது முற்றிவிட்டது?' என்றார் பாலசிங்கம்.

சந்தேகமில்லாமல். ஏனென்றால், அந்தக் காதல் வலையில் சிக்கியிருந்த உமாமகேஸ்வரன், புலிகள் அமைப்பின் மத்தியக் குழு சேர்மன்! சர்வ வல்லமை படைத்த பதவி. தேச விடுதலை என்னும் மிக உயர்ந்த நோக்கத்துடன் போராடத் தொடங்கியிருந்த வீரர்கள் அத்தனை பேரையும் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர் அவர். பிரபாகரனுக்கு அடுத்தபடி அவர்தான் எல்லாம். இயக்கத்தின் செயல்பாடுகளைப் பரவலாக்குவது, வெளிநாடுகளில் ஆதரவு திரட்டுவது என்று அடுத்தடுத்த ஏராளமான பொறுப்புகள் அவரிடம் விடப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் அனைத்தையும் உமா மகேஸ்வரனே வைத்திருந்தார்.

அதுதான் பிரச்னையாகிப் போனது. அத்தனை சுலபத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடிக்குத் தடுத்து நிறுத்தியது.

`உமா, ஏன் இப்படி? நீங்களும் ஊர்மிளாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள் என்றால், அதனை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாமே? திருமணம் தவறல்ல. முறை தவறிய உறவுதான் பிரச்னை. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தே ஆகவேண்டும். ஒன்று, ஊர்மிளாவைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அல்லது மத்தியக் குழுத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்களாக விலகிவிடுங்கள்' என்றார் பாலசிங்கம்.

உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலுறவு கொண்ட காட்சியை நேரில் சிலர் பார்த்திருந்தார்கள். அவர்கள்தாம் தலைமைக்குத் தகவல் கொடுத்தவர்கள். முன் விரோதம் கொண்ட யாரோ ஒருவர் என்றெல்லாம் எளிதில் தள்ளிவிட முடியாதது அது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பார்த்திருக்கிறார்கள். நம்பகமானவர்கள். இயக்கத்தின் விசுவாசம் மிக்க போராளிகள்.

இல்லவே இல்லை என்றார் உமா மகேஸ்வரன். ஆமாம், இல்லவே இல்லை என்றார் ஊர்மிளா.

சரி, முறை தவறிய உறவு இல்லை என்றே வைத்துக் கொண் டாலும் காதல் உண்டல்லவா? திருமணம் செய்துகொள்வதில் என்ன பிரச்னை என்று பாலசிங்கம் கேட்டார். உமா பேசாதி ருந்தார். காரணம் இருந்தது. தெல்லிப்பளை கணபதி பிள்ளை என்பவரது மகளை உமா மகேஸ்வரன் தனது கல்லூரிக் காலம் முதலே காதலித்து வந்தார். (பிறகு அவரைத்தான் திருமணமும் செய்து கொண்டார். ஊர்மிளா மஞ்சள் காமாலை வந்து இறந்தார்.) இப்போது ஊர்மிளாவைத் திருமணம் செய்து கொண்டால் அந்தக் காதல் என்னாகும்?

சென்னை தண்டையார் பேட்டையில் தங்கியிருந்தபடிக்கு, அமைப்பு சார்பில் கடிதங்கள் எழுதுவது, ஆவணங்கள் தயாரிப்பது போன்ற பணி களில் ஈடுபட்டிருந்த உமாமகேஸ் வரனுக்கு உதவி செய்யத்தான் ஊர்மிளாவும் சென்னை வந்திருந்தார். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதால், எழுத்து சார்ந்த பணிகள் அனைத்தும் அவர்கள் வசம் விடப்பட்டிருந்தன. வெகு விரைவில் இயக்கத்தைப் பரவலாக்க பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உமா தயாராக இருந்தார்.
அப்போதுதான் இந்தப் பிரச்னை வெடித்தது. பிரபாகரன் கண்மூடி யோசித்தார். வேறு வழியில்லை. உயிர்த்தோழனானாலும் இனி உனக்கு இயக்கத்தில் இடமில்லை என்று சொன்னார்.

உமாமகேஸ்வரனும் ஊர்மிளாவும் புறப்பட்டுப் போனார்கள். மனத்துக் குள் வன்மம் வளரத் தொடங் கியிருந்தது. ஏதாவது செய்ய வேண்டும், ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் மேலோங்கி நின்றது. அவருக்கு இயக்கத்தில் கணிசமான ஆதரவாளர்கள் இருந்தார்கள். பிரபாகரன் யார் நம்மை வெளியேற்றுவதற்கு? நாம் அவரை வெளியேற்றுவோம். நாம் தான் நிஜமான விடுதலைப்புலிகள். அறிவித்துவிடுங்கள் என்று ஏகமனதாகச் சொன்னார்கள்.

இயக்கம் இரண்டு பட்டு நின்ற காலம் (1981) அது. அரசியல் தளத்திலும் பரபரவென்று பல மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தன. `டெலோ'வை நிறுவி, வளர்த்துக்கொண்டிருந்த குட்டிமணியும், தங்கத்துரையும் கைதாகி சிறையில் இருந்த நிலையில், சிறீ சபாரத்தினம் டெலோவின் தாற்காலிகத் தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மிக இளம் வயதிலிருந்தே குட்டி மணியையும் தங்கதுரையையும் தெரியும். அப்பழுக்கில்லாத நேசமும் நட்பும் கொண்டவர்கள் அவர்கள்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளும் அட்ட காசங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், டெலோவும் விடுதலைப்புலிகள் அமைப்பும் இணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று இரு தரப்புத் தலைவர்களுமே நினைத்தார்கள். நட்பு அடிப்படையில் இரு இயக்கங்களும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது அன்றைய சூழலில் சாத்தியமாகவும் இருந்தது.

ஆனால், அதையே காரண மாகச் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தன்னுடையதுதான் என்று உமா மகேஸ்வரன் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடும் அபாயம் பலமாக இருந்தது. டெலோவுடன் இணைந்து வேலை செய்வது பிரபாகரன் தான்; விடுதலைப்புலிகள் அல்ல என்று சொல்லிவிடலாம் அல்லவா?

ஒன்று, உமாமகேஸ்வரன் விவகாரம் தீரவேண்டும். அல்லது அவர் இயக்கத் திலிருந்து முற்றிலுமாக வெளி யேற வேண்டும். இரண்டு மில்லாமல் டெலோவுடன் கூட்டணி வைப்பது மிகப்பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று பிரபாகரன் நினைத்தார்.

சிறீ சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அவருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் தனி நபர் ஒருவருடைய பிரச்னை யினால் ஒரு போராட்டத்தின் வேகம் மட்டுப்படுகிறதே என்கிற கவலையும் கோபமும் அவருக்கு இருந்தது. பிரபாகரனுக்கு இல்லாத கோபமா?

அந்தக் கோபம்தான் பாண்டி பஜாரில் வெடித்தது. கண்ணன் என்கிற நண்பருடன் டிபன் சாப்பிட வந்திருந்த உமா மகேஸ்வரனை பிரபாகரன் தற்செயலாகக் கண்டார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். உடன், இராகவன். (புலிகள் இயக்கத்தில் தொடக்க காலத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தவர். பிறகு அபிப்பிராய விரோதங்கள் காரணமாக வெளியேற்றப்பட்டு, இயக்கங்கள், அரசியல் அனைத்திலிருந்தும் ஒதுங்கி, கனடாவில் வசித்து வருகிறார்.)

`உமா, பிரபா!' என்று முதலில் பார்த்து எச்சரித்தது கண்ணன் தான். சட்டென்று உமாமகேஸ்வரன் தன் பிஸ்டலில் கைவைக்க, அதற்குள் பிரபாகரன் முந்திக் கொண்டார்.

காலில் குண்டடி பட்டு கண்ணன் விழ, உமா மகேஸ்வரன் உயிர் பிழைக்கத் தப்பியோட ஆரம்பித்தார். துரத்திய பிரபாகரனையும் இராகவனையும் பாண்டி பஜார் போலீஸ்காரர்கள் கைது செய்தார்கள். உமாவும் பிறகு பிடிபட்டார். பெயரென்ன என்று இன்ஸ்பெக்டர் கேட்டபோது உமா மகேஸ்வரன், முகுந்தன் என்று சொன்னார். பிரபாகரன், கரிகாலன் என்று சொன்னார்.

அங்கே, நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயவர்த்தனே. இங்கே குலுங்கிச் சிரித்தார் எம்.ஜி.ஆர்.

தலைவர் பிரபாகரன் தொடர் 6

ரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி.

கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு. அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான்.

`பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்' என்று பிரபாகரன் சொன்னார். அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்து மெயின் ரோடிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்' என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார்.

தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே?

சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோஷத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள். உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப் பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள்.

யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

`நண்பர்களே, ஒரு விஷயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?'

பிரபாகரன் கேட்டார். அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

`சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான லாகிரி வஸ்துக்களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?'

`சரி' என்றார்கள்.

`இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம். நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?'

முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு போலீஸ் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை. அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார்.

`எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது. புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விஷயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை. மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?'

அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சி களுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான். ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம் மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான். அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது? பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம். இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.

தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது.

பிரச்னை என்பது பூத மாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

(தொடரும்)
'சேலத்துக்குப் போய்விடலாம்' என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. சேலம் சென்று என்ன செய்வது? வெறுமனே ஊர் சுற்றுவது தவிர வேறு எந்தப் பயனுமில்லை. தப்பித்து வந்தது, பதுங்கியிருப்பதற்காக என்று அவர் கருதவில்லை. செயல், செயல் முக்கியம். ஏதாவது செய்தாக வேண்டும். மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய தருணம் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். ஒரு தாற்காலிக ஏற்பாடாகவே தமிழகப் பயணத்தை அவர் எண்ணினார். சில நாட்கள் சென்னைக்குச் சென்று தலைவர்களைச் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. யாராவது உதவ வேண்டும் அதற்கு. யார்?

ஒரு செய்தி வந்திருந்தது. அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம் மயிலாப்பூரில் வசித்துக்கொண்டிருக்கிறான்.

அடடே அப்படியா என்றார் பிரபாகரன். செட்டியை அவருக்குத் தெரியும். வெகு நன்றாகத் தெரியும். அவனது சகோதரன் செல்லக்கிளியையும் தெரியும். செட்டியின் பெற்றோர், உறவுக்காரர்கள் அனைவரையும் தெரியும். செட்டி ஒரு மாதிரியான ஆள். ஒரு மாதிரி என்றால், உள்ளூர் கிரிமினல் என்று பொருள். கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம் கொண்டவன். அவனது வயதை ஒத்த தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்திய சமயம், எந்த வங்கியில் கைவைக்கலாம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன். போராளி இளைஞர்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வரிசையாகக் கைவரிசை காட்டுவதில் மும்முரமாக இருந்தவன்.

விடுதலை, தமிழர் நலன், மேலான சகவாழ்வு, சுதந்தரக் காற்று குறித்தெல்லாம் செட்டிக்கு எக்காலத்திலும் அக்கறை கிடையாது. போராளி இளைஞர்கள் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுகிறார்களா? நல்லது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஆயுதம் வாங்கிக்கொண்டு போகட்டும். நான் கூடச் சென்று என் பங்குக்குக் கொஞ்சம் அடித்துக்கொள்கிறேன். எனக்கு ஆயுதம் வாங்க வேண்டாம். ஆனால் ஆகவேண்டிய காரியங்கள் வேறு பல உண்டு.

பிரபாகரனுக்கு இது தெரியும். செட்டி அப்படித்தான். அவனைத் திருத்த முடியாது. அது வேறு வார்ப்பு. ஆனாலும் பழகுவதற்கு நல்லவன். பலமுறை உடன் உட்கார்ந்து பேசியிருக்கிறான். போராளி இளைஞர்களின் பல காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட செய்திருக்கிறான். யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாத போராளிகள் கிடையாது. குட்டிமணி, தங்கதுரை தலைமுறையைச் சேர்ந்தவர்களிலிருந்து பிரபாகரன் தலைமுறைக்காரர்கள் வரை அனைவர் மத்தியிலும் அவன் பிரபலம். மாணவர் பேரவை, இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கெல்லாம் கூட அவனைத் தெரியும்.

தெரியுமே தவிர யாரும் மதிக்கமாட்டார்கள். பார்த்தால் ஒரு வணக்கம். நீ சுகமா, நான் நலம். தீர்ந்தது விஷயம். சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.

பிரபாகரனும் அப்படித்தான். ஆனாலும் இந்தச் சமயத்தில் மயிலாப்பூரில் செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான செய்தி. சென்னைக்குப் போகும் எண்ணத்தில் இருந்த பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவும் பட்டது. குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிருந்து பஸ் ஏறிப் புறப்பட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.

அதற்குள் அவர் செட்டியுடன் சென்று சேருவது பற்றி, பெரியஜோதி சேலம் சென்றிருந்த தங்கதுரைக்கும் குட்டிமணிக்கும் தகவல் சொல்லி விட்டார்.

அவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனே பிரபாகரனைத் தொடர்பு-கொண்டார்கள். தம்பி வேண்டாம். அவன் ஆபத்தானவன். தவிரவும் உன்னுடைய நோக்கத்துடன் ஒத்துப்போக முடியாதவன்.

அப்படியா? செட்டி பிரபாகரனுடன் வேறு விதமாகத்தான் பேசிக்-கொண்டிருந்தான். நீங்கள் எல்லோரும் என்னைத் தவறாகப் புரிந்து-கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அக்கறை இருக்கிறது. எனக்கும் போராட்டத்தில் ஈடுபாடு இருக்கிறது. நம் மக்களின் நல்வாழ்வின்மீது ஈடுபாடு இருக்கிறது. யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ வேறு செட்டியைப் பார்க்கப் போகிறாய், பார்.

பிரபாகரனிடம் இயல்பாக ஒரு வழக்கம் உண்டு. அவரால் எந்தக் கூட்டத்திலும் சகஜமாக இருக்கமுடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டைச் சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். பின்னாளில் `டெலோ'வாக உருப்பெற்ற தங்கதுரையின் நண்பர் வட்டத்தில் இருந்தபோதும் பிரபாகரன் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. செட்டி போன்ற கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தாலும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதில்லை.

இதோ பார் செட்டி, வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த கிளுகிளுப்புத் தருகிறது என்பதை நான் அறிவேன். கொள்ளையடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இயக்கம் நடக்கப் பணம் வேண்டும். வங்கியில் இருப்பது மக்கள் பணமல்லவா என்று கேட்காதே. அது அரசாங்க வங்கி. கொள்ளையுடன் நீ தேங்கிப் போவதால் நீ கிரிமினல் என்று கருதப்படுகிறாய். பணமே இல்லாது போனாலும் என் செயல்பாடு நிற்கப்போவதில்லை. வித்தியாசம் புரிகிறதா?

நிறையப் பேசினார்கள். யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பிறகு என்ன-வெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிப்பேசித் திட்டமிட்டார்கள். திட்டங்கள் செயல்படுத்தப்படத் தேவையான பணத்துக்குத் தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான். வேறென்ன? வங்கிக்கொள்ளைதான்.

1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். பரபரவென்று காரியங்கள் நடைபெறத் தொடங்கின. சாத்வீகிகள் அங்கே தபால் தலைப் போராட்டம் என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது, பிரபாகரன் தனது நண்பர்களை அழைத்தார்.

காத்திருந்தது போதும் நண்பர்களே. நாம் தொடங்கலாம் என்று சொன்னார். ஒரு பக்கம் வங்கிக்கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்றன. பொறுப்பு செட்டியுடையது. பிரச்னையே அங்குதான். இயக்கப் பணிகளுக்காக என்று சொல்லிவிட்டு நடத்திய கொள்ளைகளில் பாதிப் பணம் வந்து சேரவே இல்லை. அடடே, செட்டி கார் வாங்கிவிட்டானாமே? அப்படியா? அவன் பளபளவென்று சில்க் சட்டை போட்டுக்கொண்டு போகிறான், கமகமவென்று செண்ட் அடித்துக்கொண்டு வருகிறான் என்று ஆளுக்கொரு தகவல் சொன்னார்கள்.

பிரபாகரனுக்கு வெறுப்பாக இருந்தது. ம்ஹும். சிலரைத் திருத்தமுடியாது. அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சரி, நாம் குண்டு வைக்கலாம் என்று எழுந்தார்.

ஒரே நாள். ஒரே சமயம். யாழ்ப்பாணத்தின் முக்கியமான ஒரு கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில இடங்களில் பிரபாகரன் வைத்த குண்டுகள் வெடித்தன. சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க ஆரம்பித்தார்.

உண்மையில் பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச் சீர்குலைவு நோக்கமாக இருக்கவில்லை. அவரது இலக்கு வேறு. ஒரு பெரும் படுகொலையைத்தான் தொடக்கப்புள்ளியாக மனத்தில் குறித்து வைத்திருந்தார். முதல் அத்தியாயத்தில் பார்த்த ஆல்ஃப்ரட் துரையப்பா. நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய கிருமி என்று தீர்மானம் செய்திருந்தார்.

அந்த வருடம் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று காவல் துறையும் நகர மேயரான துரையப்பாவும் இணைந்து நடத்திய களேபரத்தில் ஒன்பது தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். தமிழர்கள் அத்தனை பேரின் வெறுப்பும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.

துரையப்பாவின் கணக்கைத் தீர்த்ததுதான் பிரபாகரனின் வெளியே தெரிந்த முதல் செயல். அதன்பிறகு அவரது `புதிய தமிழ்ப் புலிகள்' புதிய வேகம் கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. 1976 மே 5-ம் தேதி பிரபாகரன் இயக்கத்துக்கு வேறு பெயர் வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய விதிமுறைகள் வகுத்தார். புதிய ஒழுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பழைய அமைப்பில் இருந்த பிசிறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன. சரி செய்ய முடியாதவை களையப்பட்டன, செட்டியைப் போல.

(தொடரும்)

தலைவர் பிரபாகரன் தொடர் 4

ல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.
எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கஷ்டம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகிவிட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்' என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..

தொடரும்


ந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜகதீஸ்வரியிடம் கேட்டார். ம்ஹும். வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா?

தெரியவில்லையே அப்பா என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.

திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்? கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். ரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள். 

அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விஷயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது.

அதில்தான் கைவைக்கிறார்கள். நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.

இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் போஸ்டர் ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே? தம்பி, நீ போஸ்டர்தானே ஒட்டுகிறாய்?

புன்னகைதான் பதில். அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?

தம்பி வந்துவிட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். எங்கே போய்விட்டாய், தம்பி?

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்துகொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகிவிட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்றுகொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்துவிட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோஷம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக்கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்றுமுன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..


ந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். ``அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?''

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்' என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?

ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.

அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.

`தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்...'

பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.

பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்...

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.

(தொடரும்)
கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே'' என்றார் காண்டீபன்.

`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?' என்று இன்பம் கேட்டார்.

``கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.

அலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளவேண்டும். வீட்டுக்கே போய் வேலையை முடித்துவிடலாம். காரில் போகும்போது சுட்டுவிடலாம். ஏதாவது விழாவுக்கு வருவான். மேடையில் முடித்துவிடலாம்...''

இடம், தேதி, தருணம் தீர்மானித்து, ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்ட விவரம் தெரியாமல் நண்பர்கள் லொக்கேஷன் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதும். குடித்துவிட்டு மணிக்கணக்கில், சமயத்தில் முழுநாள் கூட உட்கார்ந்து விவாதிப்பார்கள். பேச்சில் சூடு பறக்கும். சிந்திக்கும் கணத்திலேயே செய்து முடிக்கும் வெறி கண்ணில் ஒரு மின்னல்போல் வெட்டும். எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தாலும், ஏதாவது செய்தாகவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணமில்லை.

ஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். முந்தைய தலைமுறையின் `ஏதாவதுகள்' எதுவுமே பிரயோஜனமில்லை. அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஊர்வலம் போனார்கள். கறுப்புக் கொடி காட்டினார்கள். மேடை போட்டுப் புலம்பினார்கள். கைதாகி, அடிபட்டு, எலும்பு முறிந்து படுத்தார்கள். என்றாவது ஒருநாள் ஏதாவது நடக்கும் என்கிற வண்ணமயமான கனவைச் சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

இனி அந்த வழி உதவாது. மறு கன்னத்தைக் காட்டிய பெரியவர்களே, உங்களை மதிக்கிறோம். ஆனால் பின்பற்றுவதற்கில்லை. அறவழிப் போராட்டங்கள் மனிதர்களுக்குப் புரியும். சிங்களர்களுக்குப் புரியாது. எங்கள் பாதை வேறு. எங்கள் பயணம் அபாயகரமானது. பணத்தையல்ல; எங்கள் உயிரை நாங்கள் முதலீடு செய்கிறோம். நாளைய சந்ததிக்கு சுதந்தரம் அசலாகவும், நிம்மதி வட்டியாகவும் கிடைத்துவிட்டுப் போகட்டும்.

இதோ, தொடக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக துரையப்பாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஆல்ஃப்ரட் தங்கராஜா துரையப்பா. தமிழர்தான். ஆனால் தொகுதியில் எந்தத் தமிழரோடும் உறவற்றவர். பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960 முதல் 65 வரை யாழ்ப்பாணம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார் என்று உடனே கேட்பீர்கள். தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, சுயேச்சையாக நின்ற துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள். அடுத்த ரவுண்டில் மேலும் எப்படி மேயரானார் என்பீர்கள்.

நாங்கள் அரசியல்வாதிகளல்லர். ஆனால் அருவருப்பு அரசியலின் ஆணிவேர் வரை எங்களுக்குத் தெரியும். கோட்டைக்குப் போகும் வேட்கையில், வோட்டுக்குப் பேசும் பேச்சுகளின் அபத்தம் சாத்வீகிகளுக்குப் புரியாதிருக்கலாம். அந்தத் தலைமுறைதான் அவனை நம்பி உட்காரவைத்தது. எங்களிடம் அது பலிக்காது.

எத்தனைபேர் முயற்சி செய்திருக்கிறார்கள்! அமைதியல்ல; ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய தலைமுறையின் முதல் நபர் தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான் முதல் கனவாக இருந்தது. துரையப்பாவைக் கொல்லவேண்டும். சிவகுமாரன் முயற்சி செய்திருக்கிறார். சத்தியசீலனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது. அவரது தமிழ் மாணவர் பேரவையில் இருந்த அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள். பேரவைக்கு வெளியே இருந்த இளைஞர்களிடையேயும் அது கனவாக இருந்தது. இது கொலையல்ல; களையெடுப்பு.

யாராலும் முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. துரையப்பா லேசுப்பட்ட ஆளில்லை என்பதும் ஒரு காரணம். மாநகரத் தந்தை. பாதுகாப்பு பந்தோபஸ்துகள் அதிகம். அரசியலின் மேல்மட்டம்வரை தொடர்புகள் உண்டு. கொழும்பு செல்வாக்கு அதிகம். ஆனாலும் யாழ்ப்பாணம்தான் அவரது தலைநகரம். அங்கே இங்கே நகரமாட்டார். எதிரே யாரும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. போகிற வழியெல்லாம் மூக்குக்கு நேரே இரு கைளையும் உயர்த்திக் கும்பிட்டபடி போகிற பழக்கம் வந்துவிட்டது. அத்தனை மக்களுக்கும் நண்பன் என்று சொல்லிக்கொள்வார். வடக்கில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும் தனக்கு உறவு என்பார். கிறிஸ்தவர் என்றாலும் ஹிந்து கோயில்களுக்குப் போவார். கடவுள் ஒரு பொருட்டில்லை என்றாலும் அது ஒரு கம்பீரம். ஆஹா, மத நல்லிணக்கவாதி. நம்மில் ஒருவர். நமக்காக இருப்பவர்.

அவருக்குத்தான் கட்டம் கட்டினார்கள். நாங்கள் கொலை செய்யப் போவதில்லை. கொசு மருந்தடிக்கப் போகிறோம். கொசு மருந்தடிப்பது கொலை என்றால் இதுவும் அப்படியே ஆகுக.

`சீக்கிரம் சொல். எங்கே செய்யப் போகிறோம்?' காண்டீபன் கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தின் மகன். எனவே அப்பாவின் வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாலை வேண்டாம் என்று நினைத்தார்.

இது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. ஒரு பொதுக்காரியம் என்று எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு சொந்த விருப்பு வெறுப்புகள் குறுக்கே வருவது அடுக்காது. இங்கேதான் தடுக்கும். இதுதான் காலை வாரும். இதற்கு உண்ணாவிரதம் தேவலை. ஊர்வலமே போதும். பொதுக்கூட்டம் இதனினும் பெரிது. ஏன் நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை?

போட்டுவைத்த திட்டத்துக்கு மாற்றாக வந்த அனைத்து யோசனைகளையும் அந்த இளைஞன் நிராகரித்தான். ``காண்டீபன், நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். இன்பம், நீங்களும். நமது நட்பு எப்போதும் தொடரும். ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றுவது காரியத்தைக் கெடுக்கும். நாம் பேசித்தான் முடிவெடுத்தோம். ஆயிரம் முறை பேசலாம். ஆனால் முடிவு என்பது ஒருமுறை எடுப்பது. இன்னொரு விஷயம். நம்மில் சிலர் இந்தத் திட்டம் பற்றி வெளியே பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேண்டாம், அவர்களும் விலகிக்கொள்ளட்டும். ஒரு துளி பயம் என்பது ஒரு துளி விஷத்துக்குச் சமம். எனக்கு அது இல்லை. எனவே நான் முடித்துவிடுகிறேன்.''

1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றபோது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.

திட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்வார்.

அன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.

துளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப்போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின்மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக்கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார்.

நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறி, யாழ்ப்பாணம்.

இறங்கியதும், ``சரி பாப்பம்'' என்று பிரபாகரன் விடைபெற்றார். இன்னொரு பஸ் பிடித்து வல்வெட்டித்துறைக்குப் போனார்.
வீட்டில் அப்பா திருவாசகம் படித்துக்கொண்டிருந்தார். பார்த்ததும் புன்னகை செய்தார். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் புன்னகை. அப்பா என்றால் சாந்தம். ``சாப்பிட்டீர்களா அப்பா?''

பிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். நிம்மதியாகத் தூங்கினார். செய்தது பற்றிச் சிந்தனை ஏதுமில்லை. இனி செய்யவேண்டியது பற்றித்தான்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.