Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 5, 2009

தலைவர் பிரபாகரன் தொடர் 8





என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு?

எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது' என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது. வடக்கே ஏதோ ஓரிடத்தில் என்று சொல்லப்பட்டது. என்ன பயிற்சி, யார் அளிக்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருந்தது. இந்திய அரசு, இலங்கைப் போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன? பிரதமர் இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. எல்லாம் ரகசியம். பரம ரகசியம்.




பாண்டிபஜார் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆஹா! சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் என்று உருக ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. ஒரு தமாஷ். இலங்கையில் எத்தனை இயக்கங்கள் செயல்படுகின்றன, யார் யார் முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம் அப்போது இங்கே தெரியாது. இலங்கைப் போராளி என்றாலே புலிதான். தெரிந்த ஒரே பெயர். வெலிக்கடைச் சிறைப் படுகொலை விவரங்கள் தெரியவந்தபோது குட்டிமணி, தங்கதுரை, ஜகன் போன்ற பெயர்கள் தெரிந்தன. பெயர்கள்தான். முகம் தெரியாது. 1983 ஜூலை மாதம் அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட மாபெரும் இனப்படுகொலை வைபவத்துக்குப் பிறகு இந்த விவரங்கள் படிப்படியாகப் பரிமாணம் பெறத் தொடங்கி, இலங்கையில் என்னவோ விபரீதம் என்று இங்கே விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகள் கூர்ந்து நோக்கத் தொடங்கின. என்ன செய்யலாம், எப்படி உதவலாம், யாரைத் தேடிப் பேசலாம் என்று எல்லோரும் தவிக்கத் தொடங்கினார்கள்.



எண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். எத்தனை பேர் இருக்கிறீர்கள் தமிழகத்தில்? ஐந்து போராளி இயக்கங்களா? சரி, பரவாயில்லை. அனைவரும் வாருங்கள். நான் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்களிடையே ஒற்றுமை வேண்டும். ஒரே நாடு, ஒரே பிரச்னை, ஒரே மக்கள், ஒரே இனம். ஒரே இலக்குக்காகத்தானே போராடுகிறீர்கள்? ஏன் தனித்தனிக் குழுக்கள்? அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் என்ன? சம்மதமென்றால் நான் உதவுகிறேன். வாருங்கள், பேசுவோம். உண்மையில் அது எம்.ஜி.ஆரின் விருப்பம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக மக்கள் அத்தனை பேரின் விருப்பமாகவும் அன்றைக்கு அதுதான் இருந்தது.

உலக அரசியலில் பனிப்போரும் தமிழக அரசியலில் வெப்பப்போரும் மிகுந்திருந்த காலகட்டம் அது. இலங்கைப் போராளிக் குழுக்களை எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசவிருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் வாருங்கள். இங்கும் இளைப்பாறலாம். ஆனால் ஒரு விஷயம். எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைத்திருக்கும் தினத்துக்கு ஒருநாள் முன்னதாக!

பிரபாகரன் அப்போது திருவான்மியூரில் தங்கியிருந்தார். ஆண்டன் பாலசிங்கம், இராகவன், பேபி சுப்பிரமணியம், பண்டிதர், சங்கர், ரகு என்று அவருடன் ஒரு சிறு குழு (இதில் சங்கரும் ரகுவும் மெய்க்காப்பாளர்கள்.) அவர் தங்கியிருந்த இடத்திலேயே இருந்தது. சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல போராளிகள் தங்கியிருந்தார்கள்.

இது பிரச்னை. பெரிய பிரச்னை. எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கலைஞர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்குப் போவது மிகுந்த தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடியது. போகாமல் இருப்பது அவமதிப்பது போல் ஆகிவிடும். என்ன செய்யலாம்?

பிரபாகரன் சிந்தித்தார். பிரச்னை, அவர்கள் அழைப்புக்குச் சம்மதிப்பதா? இல்லையா? என்பது மட்டுமல்ல. தமிழகத்தில் அப்போது முகாம் அமைத்து இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பெரும் போராளி அமைப்புகளின் தலைவர்களையும் இரண்டு தலைவர்களும் அழைத்திருந்தார்கள். என்றால் கண்டிப்பாக உமாமகேஸ்வரனும் வருவார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த நாளாக, நாங்கள்தான் உண்மையான விடுதலைப் புலிகள் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு PLOTE என்னும் அமைப்பைத் தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிருந்தார். அவரும் தமிழகத்தில் தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் பத்மநாபா, ஈரோஸின் பாலகுமார், டெலோவின் சிறீ சபாரத்தினம் அத்தனை பேரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள். முதல்வர் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் இந்த எதிர் துருவங்கள் மோதிக்கொள்ளும்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால்?

தமிழகம் மதிக்காது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிறகு ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். உன்னதமான நோக்கத்துடன் தேசப்பணி புரிபவர்களைப் பிறகு வெறும் கிரிமினல்களாகத் தமிழகம் பார்க்கத் தொடங்கிவிடும். எதற்கு இந்த அபாயம் என்று பிரபாகரன் நினைத்தார். ஆனால் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் அழைத்திருக்கும்போது, அதனை மதித்து நாம் போகாமல் இருந்தால் தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறதே?

என்ன ஆனாலும் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப் போட்டியாக, முதல் நாள் கலைஞர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைத் தவிர்த்தே தீருவது என்று இறுதியில் முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப் போவதா? இல்லையா? என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இருபத்தி நான்கு மணிநேர அவகாசம் இருக்கிறது.

ஒரு விசித்திரம். இதே மாதிரிதான் அன்றைக்கு உமாமகேஸ்வரனும் நினைத்திருக்கிறார்! கலைஞரின் அழைப்பை அவரும் ஏற்கவில்லை. கூட்டத்துக்குச் செல்லவில்லை. மற்ற மூன்று போராளி இயக்கத் தலைவர்களும் கலைஞரைச் சென்று சந்தித்த விவரம் மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தன. எம்.ஜி.ஆர். கடுப்பானார். உடனே அன்றைய டி.ஐ.ஜி. அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில் சந்தித்து, தன்னை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பினார்.

திருவான்மியூர் வீட்டுக்கு அலெக்சாண்டர் வந்தபோது பிரபாகரன் அங்கே இல்லை. பாலசிங்கம் இருந்தார். அலெக்சாண்டர் அவரிடம் விவரம் சொன்னார். முதல்வர் கோபமாக இருக்கிறார். கலைஞரின் போட்டிக் கூட்டத்துக்குப் போராளித் தலைவர்கள் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் போகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார். இன்று மாலையே.

தர்மசங்கடம்தான். ஆனால் சமாளித்தாகவேண்டும். நான் வரவில்லை, நீங்கள் மட்டும் போய்வந்துவிடுங்கள் என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார் பிரபாகரன்.

பாலசிங்கம், மு. நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். `எங்கே பிரபாகரன்' என்று கேட்டார். `அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார், அதனால் வரமுடியவில்லை' என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.

எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு பேசினார். என்ன நடக்கிறது இலங்கையில்? போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன? இந்தியா என்ன உதவி செய்கிறது? பயிற்சி அளிக்கிறதா? பண உதவி செய்கிறதா? இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.

பாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப்படுகொலைகள். `கறுப்பு ஜூலை'யில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை அளிக்கும் பயிற்சிகள். இருநூறு விடுதலைப்புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.

ஓஹோ! என்றார் எம்.ஜி.ஆர். `உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்று கேட்டார்.

ஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று, `நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா?'

எம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.

பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப்போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத்தளத்துக்குக் கீழே போனது. நின்றதும் இறங்கி, கதவைத் திறந்தால் விசாலமான ஓர் அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.

இரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி..

(தொடரும்)

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.